பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன.
வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது.
இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.
வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள்.
ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய ஒரு விசாலமான அறிவு தேவைப் படும்.
மேலும் பங்கு முதலீட்டை பொறுத்த வரை, இறந்த காலத்தை விட எதிர் காலத்திற்கே அதிக மதிப்பு என்பதால், இந்த நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.
இப்படி ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்தவுடன் இவர்கள் உடனடியாக முதலீடு செய்வதில்லை. சரியான விலைக்காக காத்திருக்கிறார்கள். சரியான விலையை கண்டறிய சில கணித முறைகளை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.
கணக்கு என்றவுடன் பயப் பட வேண்டாம்.
இன்று தாமும் பெருமளவுக்கு தோல்வியடைந்து நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களையும் அதிகம் தோல்வியுற செய்யும் பல நிபுணர்கள் எளிதில் விளங்காத கடினமான கணித முறைகளை பின்பற்ற வாரன் பபெட் போன்ற வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் மிக மிக எளிமையான கணக்கு முறையையே பின்பற்றி வருகின்றனர்.
இந்த புத்திசாலிகளை சந்தையின் குறுகிய கால மாற்றங்கள் பாதிப்பதில்லை. ஊடகங்கள் பரப்பும் வதந்திகள், பீதிகள், உள்ளிருப்பு தகவல்கள் (Insider Information) போன்றவற்றையும் இவர்கள் உதறித் தள்ளி விடுகிறார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் ரியாக்சனை விட ஆக்சனை விரும்புகிறார்கள்.
இதயம் சொல்வதை கேட்காமல் மூளை சொல்வதை அதிகம் கேட்கிறார்கள்.
அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள்.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஆண்டறிக்கையை இது போன்ற புத்திசாலிகள் படிக்க, இந்த நிறுவனத்தை வாங்கலாமா வேண்டாமா என்று ஊடக நிபுணர்கள் தரும் பரிந்துரையை நம்மைப் போன்றவர்கள் படிக்கின்றோம்.
இந்த பங்கின் விலையை மட்டுமே நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, இவர்களோ, நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நூறு புள்ளிகள் உயர்ந்து விட்டாலே கண்ணை மூடிக் கொண்டு உள்ளே குதிக்கும் நம் போன்றவர்க்கு மத்தியில் வருடக் கணக்காக கூட இவர்களால் பொறுமையாக இருக்க முடியும். அந்த பொறுமை இவர்களின் முடிவு எடுக்கும் திறன் மீது இவர்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.
இவர்களின் பாதை அறிவார்த்தமானது. அபாயங்கள் குறைந்தது.
இவர்களின் வெற்றி சதவீதம் மிகவும் அதிகம். சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் இவர்களை பெருமளவுக்கு பாதிப்பதில்லை.
இந்த பாதை இப்போதைக்கு சற்று சிரமமாக தோன்றினாலும், அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.
அவர்களுடைய புத்திசாலித்தனம் தானாக வந்ததல்ல. அவர்களுடைய கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.
அந்த புத்திசாலிதனத்தை நாமும் அடைந்து இந்த பாதையில் நம்மாலும் பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க வல்ல விளக்கமான பதிவுகள் விரைவில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment